படம்: இறுதி முயற்சி
நடிப்பு: ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு
தயாரிப்பு: வெங்கடேசன் பழனிச்சாமி
இசை: சுனில் லாசர்
ஒளிப்பதிவு: சூரியகாந்தி
இயக்கம்: வெங்கடேசன் பழனிச்சாமி
பி ஆர் ஓ : வேலு
கடன் வாங்கி டெக்ஸ்டைல் தொழில் நடத்தி நசிந்து போனவர் ரவிச்சந்திரன் (ரஞ்சித்). கடன் கொடுத்த ரவுடி, ரவியை அழைத்து,”ஒரு வாரத்திற்குள் கடனை திருப்பி தரவில்லையென்றால் உன் மனைவி, பிள்ளைகளை கடத்தி
சீரழிப்பேன்” என மிரட்டுகிறான். நண்பர்கள், உறவுகள் யாரும் உதவாத நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார் ரவி. அதன் பிறகு நடப்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் உண்டு அந்த வாசகத்தை இறுதி முயற்சி படத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கடன் வாங்கி தவிக்கும் ரஞ்சித்.
தனி ஒருவன் கடன் வாங்கினால் அவன் தப்பித்து ஓட வாய்ப்பு உண்டு ஆனால் ஒரு குடும்பஸ்தன் கடன் வாங்கினால் என்னவெல்லாம் அவதிக்கு உள்ளாவான், அவன் குடும்பம் எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை கடன் வாங்கி குடும்பம் நடத்தி பரிதவிக்கும் மக்கள் அறிவார்கள். அந்த வலியை திரையில் சினிமாத் தனமாக இல்லாமல் நிஜ உணர்வுகளாக இயக்குனர் வெங்கடேசன் பழனிச்சாமி ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்துவது நிஜத்திலேயே இப்படி ஒரு துன்பத்தை இவர் அனுபவித்திருப்பாரோ என்ற கேள்வி எழுப்புகிறது.
இந்த கதை கோவையில் டெக்ஸ்டைல் ஓனர் ஒருவரின் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட பத்திரிக்கை செய்தியை பார்த்து உருவானது என்று ஏற்கனவே இயக்குனர் கூறி இருக்கிறார். பத்திரிக்கையில் செய்தியாக படித்து பலரும் கடந்து சென்றிருக்கும் நிலையில் அந்தப் பாதிப்பை மக்களுக்கு ஒரு படிப்பினையாக அதனை தர வேண்டும் என்ற உந்துதல் இயக்குனருக்கு ஏற்பட்டதற்கு அவரின் கம்யூனிச சிந்தனை காரணமாக இருக்கலாம்.
ரஞ்சித் மனைவியாக நடித்திருக்கும் மேகாலீ துன்பத்திலும் கணவனைவிட்டு பிரியாத பெண்மணியாக உணர்வு பிழம்பாகியிருக்கிறார்.
மேலும் விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வெங்கடேசன் பழனிச்சாமி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தை கடன்கார கதையாக மட்டுமல்லாமல் ஒரு சைக்கோ கிரைம் கதையையும் இணைத்திருப்பது ஆறுதல். அதுவே கிளைமாக்சில் ஒரு திருப்பத்தை தருகிறது.
கந்து வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி ரவுடி கூட்டத்திற்கு எதிராக சட்டம் இருந்தாலும் இதuவரை ஒருவர் கூட தண்டிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியையும், சந்தேகத்தையும் இப்படம் எழுப்புகிறது.
ஒரு பாடலுக்கு சோக ஸ்வரங்களுடன் படம் முழுவதும் ஒலிக்கச் செய்து கவனத்தை காட்சிகளுக்குள் ஈர்க்கிறார் இசையமைப்பாளர் சுனில் லாசர்.
சூரியகாந்தி ஒளிப்பதிவு தெளிவு.
இறுதி முயற்சி – மன இறுக்கம், நெஞ்சுருக்கம்..

Review By
K.Jayachandhiran
Trendingcinemasnow.com
