படம்: சக்தித் திருமகன்
நடிப்பு: விஜய் ஆண்டனி, கண்ணன், க்ரிஷ் ஹாசன், வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண் ரத்தோட், ரினி பாட் , ரியாஜித்து, சோபா விசுவநாத்,
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ஷெல்லி ஆர் காலிஸ்ட்
இயக்கம்: அருண் பிரபு
பிஆர்ஓ: ரேகா
கிட்டு (விஜய் ஆண்டனி) ஒரு அரசியல் தரகர். அரசாங்கத்தில் வேலை முடிய வேண்டுமென்றால் தனக்கான ஒரு கமிஷனை எடுத்துக்கொண்டு அந்த வேலையை முடித்து தருவதில் கில்லாடி. மத்திய பெண் மந்திரி ஒருவரின் உதவியாளர் கிட்டுவை சந்தித்து “என்னை யாரும் மதிப்பதே இல்லை, குறிப்பாக மந்திரி என்னை சுத்தமாக மதிப்பதில்லை. அவர்களிடம் எனக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால். அந்த மந்திரி வெளிநாட்டு நிறுவனத்திற்கு தரவிருக்கும் நிலத்தை என் பெயருக்கு மாற்றித் தர வேண்டும்” என்று கிட்டுவிடம் கேட்கிறார். அந்த வேலையில் கிட்டு இறங்குகிறார். இது பெண் மந்திரிக்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. பெண் மந்திரியின் அந்தரங்க ஆலோசகர் ஒருவர் மந்திரி என்னென்ன செய்ய வேண்டுமென்று அட்வைஸ் தருகிறார். ஆனாலும் பல்வேறு விஷயங்கள் அவரது கையை மீறி நடக்கிறது. தான் சூழ்நிலை கைதியாக இருப்பதை உணர்ந்த பெண் மந்திரி
தன்னை இந்த கதிக்கு ஆளாக்கியவரை கண்டுபிடித்து அழிக்கும்படி அந்தரங்க ஆலோசகரிடம் கூறுகிறார். அவர் இந்த வேலைகளை தரகர் கிட்டுதான் செய்கிறார் என்பதை அறிந்து அவரை முடக்கப் பார்க்கிறார் அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கிட்டு என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். மாறுபட்ட கதைக் களங்களில் நடிப்பது அவரது ஸ்டைல். அந்த வேலையைத்தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார்.
அரசியல் தரகர் விஷயத்தை இப்படியொரு கதைக் களத்தில் இதுவரை யாரும் கையாண்டதில்லை. இந்த கதைக்களத்தை இயக்குனர் அருண் பிரபு கையாண்டிருக்கும் விதம், கதாபாத்திரத்தை உணர்ந்து விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பாணி , கதை நகர்வு எல்லாம் சேர்ந்து முதல் பாதி வரை படத்தை மெல்ல மெல்ல நகர்த்தி செல்கிறது.
கிரிப்டோ கரன்சி, பண பரிமாற்றம் , ஹேக் செய்து கணக்குகளை முடக்குவது போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பலருக்கு புரிய வாய்ப்பில்லை. பல வசனங்கள் ஆங்கிலத்திலேயே வருவதால் அந்த காட்சிகளும் என்ன சொல்ல வருகிறது என்பதில் தெளிவில்லை.
இடைவேளைக்கு பிறகு கதையின் போக்குமாறி முழுக்க முழுக்க அரசியல் களத்துக்குள் புகுந்து விடுகிறது. கையில் கிடைத்த அதிகாரத்தை வைத்து அவால்கள் போடும் ஆட்டத்தை தனி ஆளாக நின்று விஜய் ஆண்டனி
சல்லி சல்லியாக நொறுக்கும் விதமும் அடுத்த அடி யாருக்கு எப்படி விழும் என்று யோசிக்க முடியாதளவுக்கு தருவது அப்ளாஸ் பெறுகிறது.
காதல் ஓவியம் கண்ணன் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் வில்லனாகவும் , பெரியாரிஸ்டாக வாகை சந்திரசேகர் நடித்துள்ளனர். கதாநாயகி திருப்திக்கு அதிக வேலை இல்லை. காமெடி நடிகர் செல் முருகன் விஜய் ஆண்டனி உதவியாளராக வருகிறார்.
கதைக் களத்தை பொருத்தவரை மேலிடத்திலிருக்கும் ஆரியத்துக்கும், அவர்கள் செய்யும் சகுனித்தன வேலைகளுக்கும் சாமான்யன் ஒருவன் சவுக்கடி தந்து தெறிக்க விடுவது தான் என்று திடமாக முடிவு செய்து அதை திணறாமல் இயக்கி திரைக்கு கொண்டு வந்திருக்கும் இயக்குனர் அருண் பிரபுக்கும் , ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் ஒரு கைகுலுக்கல்.
காட்சிகளின் வேகத்தை விட விஜய் ஆண்டனியின் இசை வேகம் தூள்.பறக்கிறது. ஜில் ஜில் பாடல் தலையாட்ட வைக்கிறது.
ஷெல்லி ஒளிப்பதிவு கண்ணாடியின் பளபளப்பு.
சக்தித் திருமகன் – அவாலை பொளக்கும் பெரியாரின் கைத்தடி.
