படம்:ஏஸ் (ACE)
நடிப்பு: விஜய்சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ் திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ்
தயாரிப்பு: ஆறுமுக குமார்
ஒளிப்பதிவு:
கிரண் பகதூர் ராவத்
இசை: ஜஸ்டின் பிரபாகரன், சாம் சி எஸ்
இயக்கம்: ஆறுமுக குமார்
பி ஆர் ஒ: யுவராஜ்
வேலை தேடி மலேசியா வரும் விஜய் சேதுபதி தனக்கு யோகிபாபு வேலை வாங்கித் தருவார் என்று எண்ணுகிறார். பணக்காரர் என்று கூறிக்கொள்ளும் யோகிபாபு குப்பை பொறுக்கும் வேலை செய்வதை பார்த்து விஜய் சேதுபதி ஷாக் ஆகிறார். இதற்கிடையில் நாயகி ருக்மணியை பார்க்கும் விஜய்சேது அவர் மீது காதல் கொள்கிறார். காதலியின் ஒரு டார்கெட்டை முடிக்க விஜய்சேது சூதாட்டம் ஆடுகிறார். முதலில் சம்பாதிக்கும் அவர் பிறகு அதை தோற்கிறார். மீண்டும் சம்பாதிக்க கடன் வாங்குகிறார். அதை கட்டுவதற்கு வங்கியில் கொள்ளையடிக்கிறார். அவரை போலீஸ் துரத்துகிறது. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கமர்ஷியலான ஒரு படத்தில் எப்படி காதல், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்திருக்க வேண்டுமோ அப்படி உருவாகியிருக்கிறது ஏஸ் .
போல்ட் கண்ணன் என்ற பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதென்ன போல்ட் கண்ணன் என்று கேட்பவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை சொல்லி சமாளிக்கிறார். ஆனால் கடைசி வரை விஜய் சேதுபதி யார் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைப்பது 2ம் பாகத்துக்கு இயக்குனர் தயாராக இருப்பது புரிகிறது.
விஜய் சேதுபதி,
யோகிபாபு சேர்ந்தடிக்கும் லூட்டி காமெடியாக அரங்கை கலகலக்க வைக்கிறது.
ஹீரோயின் ருக்மணி யிடம் வம்பு செய்யும் ரவுடிகளை திடீர் தாக்குதல் நடத்தி விஜய்சேதுபதி அலற விடுவதும், அதேபோல் வட்டிக்கு பணம் தந்து டார்ச்சர் செய்யும் வில்லனையும் அவனது கூட்டத்தையும் அடித்து துவம்சம் செய்வது என ஆக்ஷ்ன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

காதல் காட்சியில் ஓகே என்றாலும் நெருக்கமான காட்சியில் தயக்கம் காட்டுகிறார் விஜய்சேதுபதி. வேறு ஹீரோவாக இருந்தால் குறைந்த பட்சம் இரண்டு லிப் டு லிப் கிஸ்ஸாவது ருக்மணிக்கு கொடுத்திருப்பார்கள். விஜய்சேதுபதியோ கட்டிபிடிக்கக்கூட கூச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறார். ஐயோ பாவம்..
ஹீரோயின் ருக்மணி கவர்ச்சி சிலையாக வருகிறார். அவரிடம் இளைஞர் லெக் பீஸ் கேட்கிறார் என்றால் அந்தளவுக்கு ருக்மணி தூக்கலான உடையில் கிக் ஏற்றுகிறார் என்றுதானே சொல்ல வேண்டும். இலவட்டங்களை வாயில் ஜொள்ளு விட வைத்து விடுகிறார் .
யோகிபாபுவை இதுவரை இல்லாத அளவுக்கு இயக்குனர் வேலை வாங்கியிருக்கிறார். தலை தெறிக்க ஓட விட்டிருக்கிறார், குப்பை அள்ள வைத்திருக்கிறார். தனக்கே உரித்தான பாணியில் காமெடியும் செய்யத் தவறவில்லை யோகிபாபு.
பப்லு பிரித்விராஜ் வில்லன் வேலையை கச்சிதமாக செய்கிறார் இந்த வயதிலும் உடலை கட்டுமஸ்த்தாக வைத்திருப்பது ஆச்சர்யம். யோகிபாபுவுக்கு ஜோடியாக வரும் நடிகையும் கவனத்தை கவர்கிறார்
இதுவரை மலேசியா நாட்டை பார்க்காதவர்கள் குடும்பமாக சென்று இந்த படத்தை பார்த்தால் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மலேசியாவை சுற்றி காட்டிவிடுகிறார் இயக்குனர் ஆறுமுக குமார். லாஜிக் பற்றி எல்லாம் பார்க்காமல் படத்தை பார்த்தால் ஜாலியாக. பொழுதுபோகும்.
கிரண் பகதூர் ராவத் கேமிரா ஒளி ஓவியங்களை கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறது. இரவு காட்சியிலும் வண்ண விளக்குகளின் ஜொளி ஜொளிப்பு அரங்கை கலர்ஃபுல்லா க்குகிறது.
பாடலுக்கான ஜஸ்டின் பிரபாகரன் இசை ஒருபக்கம் தாலாட்ட, சாம் சி எஸ் பாடல். மற்றும் பின்னணி இசை இன்னொரு பக்கம் அதிரடி காட்டியிருக்கிறது.
ஏஸ் – மலேசியாவின் எழிலுடன் கோடைக்கு ஏற்ற பக்கா கமர்ஷியல் விருந்து.

