எம்ஜிஆருடன் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்பட நாயகிகளுள் ஒருவராக நடித்திருந்த நடிகை ரத்னா காலமானார்.
எம்ஜிஆருடன் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்த இரு நடிகைகளுள் ஒருவர், நடிகை ரத்னா (74). “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்ற பாடல் காட்சியில் இவர் சிறப்பாக நடித்திருப்பார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 1964ஆம் ஆண்டு வெளியான ‘தொழிலாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் இவர் எம்.ஜி.ஆருக்கு இணையாக நடித்தார். பின்னர் 1966ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாம் மூவர்’ படத்தில் ஜெய்சங்கருடன் இணைஞ்சு நடிச்சா.
‘சபாஷ் தம்பி’ திரைப்படத்தில் இவர் அசோகனுடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு எம்ஜிஆர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘திருடாதே’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படங்களின் 50ஆவது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த ரத்னா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி நடிகை ரத்னா காலமானார்.
