படம்: மெல்லிசை
நடிப்பு: கிஷோர் குமார், சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன்
தயாரிப்பு: திரவ்
இசை : சங்கர் ரங்கராஜன்
ஒளிப்பதிவு: தேவராஜ் புகழேந்தி
இயக்கம்: திரவ்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா ( D’One), அப்துல் A நாசர்
பள்ளியில் பி.டி ஆசிரியராக இருக்கிறார் ராஜன் (கிஷோர் குமார்). அவரது மனைவி வித்யா (சுபத்ரா) அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். ராஜனுக்கு டிவியில் நடக்கும் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வருகிறது. அதில் பிரபலமாகிறார். போட்டியில் அவர் வெல்வாரா, இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதனால் பி.டி. மாஸ்டராக இருக்கும் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டி இருக்கிறது. இது அவரது ஆசிரியர் வேலையை பறிக்கிறது. பின்னர் குடும்பத்தில் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் போது அவரது இரண்டு பிள்ளைகள் கதி என்னவாகிறது என்பதே கதை.
கிஷோர் குமார் பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவர் முழுக்க முழுக்க ஒரு
ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதை ஒப்புக்கொள்ள தயக்கம் இருந்தாலும் நல்ல வேலையாக காதல் டூயட் எதுவும் வைக்காமல் மேடையில் மட்டுமே அவர் பாடுவது போல் காட்டி இருப்பது கதாபாத்திரத்தை சிதைக்காமல் இருக்கிறது.
கிஷோர் இதுவரை படங்களில் அதிகமாக பாடல் பாடி நடித்ததுபோல் பார்த்த ஞாபகம் இல்லை, இந்த படத்தில் அவர் பாடகராக மாறி அதற்கு ஏற்ப தனது நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் வழங்கி இருக்கிறார், அவ்வப்போது அவருக்கு காஸ்டியூம் மாற்றம் செய்திருப்பது புத்திசாலித்தனம்
உச்சகட்ட சாயல் பாடலுக்கு கிஷோர் அழுத்தம் கொடுத்து நடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
கிஷோர் மனைவியாக வரும் சுபத்திரா இயல்பான நடிப்பால் கவர்கிறார். கணவரிடம் கோபித்துக் கொள்வது, சிணுங்குவது, பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது என கதாபாத்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்.
கிஷோர் பிள்ளைகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தில் சில இடங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் போட்டி பாடலுக்கு உச்ச சாயலில் இசையமைத்து ஒரு பாடலை மனதில் பதிய வைக்கிறார் இசை அமைப்பாளர் சங்கர் ரங்கராஜன்.
தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு பளிச்.
ஒரு மென்மையான கதையை இசை லயத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் திரவ். இவரே படமும் தயாரித்திருக்கிறார். ஆக்சன், அதிரடி, மர்மம், பேய் கதை என்று பல்வேறு ஜர்னர்களில் படங்கள் வந்து கொண்டிருக்கும் போட்டியான இந்த நிலையில் மெல்லிசை என்ற மென்மையான கதையை எந்த நம்பிக்கையில் இயக்குனர் கையில் எடுத்தார் என்பது புரியவில்லை. அன்பை பரப்புவதற்காக படம் எடுத்ததாக இயக்குனர் குறிப்பிடுகிறார். அந்த அன்பு ரசிகர்களிடம் ஒர்க்கவுட் ஆகுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
மெல்லிசை – ஒரு குடும்பத்தின் கதை இது.

Review By K.Jayachandhiran
Trending cinemas now.com
