படம்: கிராணி
நடிப்பு: வடிவுக்கரசி,
திலீபன், சிங்கம் புலி, கஜராஜ், அனந்த நாக், அபர்ணா
தயாரிப்பு: விஜயா மேரி
இசை: செல்லையா பாண்டியன்
ஒளிப்பதிவு: A. மணிகண்டன்
இயக்கம்: விஜயகுமாரன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா
மச்சோடு கிராமத்தில் சவுக்கு மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை பங்களாவில் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் வசிக்கின்றனர். அவர்களை சந்திக்க ஊர் தலைவர் வருகிறார். அதே சமயம் ஒச்சி கிழவி அந்த வீட்டுக்கு வந்து மயங்கி விழுகிறார். அந்த கிழவியை பார்க்கும் ஊர் தலைவர் திகில் அடைந்து பங்களாவிலிருக்கும் கணவன் மனைவியை எச்சரிக்கிறார். மயக்கம் தெளிந்து எழுந்த கிழவி பங்களாவில் இருக்கும் குழந்தைகளை கொல்ல முயற்சிக்கிறார். தன்னை காப்பாற்றிய கணவன் மனைவியையும் அடித்து சாகடிக்கிறார். இதற்கு என்ன காரணம்? கிழவியிடமிருந்து குழந்தைகள் தப்பித்தார்களா என்பதற்கு திகிலுடன் பதிலளிக்கிறது கிராணி.
படத்தின் தொடக்கமே திகிலுடன் ஆரம்பம் ஆகிறது. வாழைத்தோப்பில் சிறுமி ஒருவர் இதயம் அறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கிறார். போலீஸ் ஏட்டு சிங்கம் புலி, சப் இன்ஸ்பெக்டர் திலீபன் இருவரும் இந்த வழக்கை துப்பு துலக்க தொடங்கியதும் காட்சிகள் எங்கெங்கோ செல்கிறது.
மச்சோடு பங்களாவில் மயங்கி விழும் ஒச்சு கிழவி வடிவுக்கரசி தள்ளாத வயதில் கம்பு ஊன்றி நடக்கும் நிலையில் அவர் மீது பரிதாபம்தான் ஏற்படுகிறது. ஆனால் காட்சிகள் நகர நகர அந்த பரிதாபம் பயமாக மாறிவிடுகிறது. அகோர முகம், கொடூர பார்வை, கணவன், மனைவியை கம்பால் அடித்து சாய்ப்பது என்று திகிலூட்டுகிறார்.
தனியாக சிக்கிக்கொள்ளும் மாற்று திறனாளி குழந்தைகள் வடிவுக்கரசியிடமிருந்து. தப்பிக்க போராடும் போராட்டம் பரபரப்பை பரவச் செய்கிறது.. ஓடிச்சென்று வடிவுக்கரசியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்றி விடலாமா என்று கூட படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கால்கள் பரபரக்கின்றன.
போலீஸ் ஏட்டாக வரும் சிங்கம் புலி தொடக்கத்தில் பயந்து நடுக்கினாலும் கிளைமாக்சில் ஒச்சி கிழவியுடன் நேருக்கு நேராக மோதும் போது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் பயத்தை உண்மையிலேயே வெளிப்படுத்தி நடித்திருப்பது அவர்களின் யதார்த்த நடிப்பில் உணர முடிகிறது.
விஜயா மேரி படத்தை தயாரித்திருக்கிறார். பாட்டி சொல்லும் கதை போன்ற ஒரு திகில் கதையை திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் விஜயகுமாரன்.
பெரும்பாலும் இரவிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
கிராணி- சூனிய கிழவி கதை.
Review By
K.Jayachandhiran
Trending cinemas now.com
