தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு தமிழக கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் விஜய் பரபரப்பாக பேசினார்.
இந்த நிகழ்வு குறித்து விவரம் வருமாறு :
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை பெற்று அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சியாக திகழ்ந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்ககள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான இடங்களை விஜய் பெற்றார். விஜய்க்கு ஆதரவு அளித்த கட்சிகள் எல்லாமே திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு ஆதரவு அளித்த கட்சிகளில் காங்கிரஸ் மட்டும் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்கிறது மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டு விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறது என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு கொடுத்தார். அதன்படி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பதவி ஏற்பு விழா நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார் . தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பின்னர் விழா மேடையிலேயே முக்கியமான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப்பொருளை தடுக்க சிறப்பு நடவடிக்கை என மூன்று கோப்புக்களில் கையெழுத்துட்டார்.
பின்னர் முதல்வர் விஜய்
தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது, ” தமிழக அரசின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. நான் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த குட்டிஸ், சுட்டீஸ்களுக்கும் என்னால் இயன்றதைச் செய்வேன். அதேசமயம் நான் மக்கள் பணத்தில் கை வைக்க மாட்டேன் ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று நினைத்து யாராவது ஆட்டம் போட நினைத்தால் அவர்களையும் விட மாட்டேன். நான் மட்டுமே இங்கு சென்டர் பவர் என்னை மீறி யாருக்கும் பவர் இல்லை.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
விஜய் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சி தலைவர்கள், நடிகை திரிஷா, விஜய் பெற்றோர் சந்திரசேகர் ஷோபா ரசிகர்கள் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் பதவியேற்பு விழாவில் தொடக்கப் பாடலாக வந்தே மாதரம் என்ற இந்தி பாடல் பாடப்பட்டது பின்னர் தேசிய கீதம் அதன் பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. பதவியேற்பு விழா முடிந்த பிறகு மீண்டும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
ஆனால் வழக்கமாக தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும். இம்முறை வந்தே மாதரம் பாடல் இந்தியில் பாடப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் இது சர்ச்சையாகி வருகிறது.
